Thursday, February 14, 2013

காதலர் தினம்

ஒவ்வொரு காதலர் தினத்திலும் இது ஏதோவொரு பாண்டஸிக்கு யாரோவொருத்தர் ஆரம்பித்த டகால்டி வேலை என்று நினைத்துக் கொள்வதோடு "வெறும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி" என்று காதலை அறிவியலாக்கி முடித்து விடுகிற ஜீனியஸ்த்தன சினிமா வசனம் பேசி வித்தியாசமானவனாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்திருந்த போதும், காதல் என்கிற அதரப்பழசான வார்த்தை உள்ளூரக் கொடுக்கிற "பெப்" சொல்லித் தீராதது.

உண்மையில் என்னுடையது காதல் சூழ் உலகு. எனக்கு உலகம் அறிமுகமானதே காதலால்தான். நான் அறிந்த முதல் காதல் கதை அப்பா-அம்மாவுடையது. மழை நேரத்து மாலைகளில் மரவள்ளிக்கிழங்கு, வரக்காபி சகிதம் இருவரும் அவர்களின் காதல் கதையை சொல்லிக்கொண்டிப்பார்கள். ஆச்சர்யமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். நேற்றுக்கூட அப்பாவின் ஒரு கடிதத்திற்கு பதிலாக அம்மா எழுதிய கவிதையொன்று எதையோ தேடிக்கொண்டிருந்த போது கிடைத்தது. பழுப்பாகி விட்ட முப்பது வயசைக் கடந்த  காவியம் அது. "எங்க அக்காவ இவங்க அண்ணனுக்கு கட்டினது.. இவரு சண்டித்தனத்துக்கு என்னைய குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. பாத்தாரு.. ஒருநா வெள்ளிக்கெழம சாயங்காலம் தே.. வா போலாம்னாரு.. கட்டுன தாவணியோட வந்ததுதேன்" என்று ஸ்கூல் விட்டு வந்த பேரனுக்கு ஹார்லிக்ஸ் கலக்கிக்கொண்டே எங்கள் பழைய வீட்டுக்காரம்மா சொன்ன போது வீட்டுக்காரய்யா முகத்தில் வாழ்நாள் சாதனை புன்னகை. அது நாற்பது வருடம் கடந்து தொடரும்  காதலின் பெருமிதம்.

இப்படி முப்பது நாற்பது வருடங்களை கடந்த காதல் ஜோடிகள் முதல், பல சாதீய-சமூக தடைகள் தாண்டி இணைந்த தம்பதிகள், "அடக்கடவுளே"வில் இருந்து "கர்த்தரே"வுக்கு மாறிவிட்ட நண்பன், "ஹே.. ஹாரிபிள் மேன்.. டு அண்ட் ப்ரோ, ஷி ட்ராவல்ஸ் அபௌட் 4 ஹவர்ஸ் எவ்ரிடே" என்று புது மனைவிக்காக நொந்துகொள்கிற பக்கத்து க்யூபிகல் வடக்கத்தி நண்பன், "நாளைக்கு எங்க கல்யாண நாள், சர்ப்ரைஸா ஒரு கேக் வாங்கி அவருக்கு வெட்டறீங்களா?" என்று கொங்கு தேசத்திலிருந்து அமெரிக்காவுக்குப் பேசும் குரல், அத்தனைப் பெண்களும் லேடீஸ் கோச்சில் ஏறிக்கொள்கிற அந்த ஸ்டேஷனில் காதலனுக்காக ஜெனரல் கோச்சில் மெனக்கெடும் சாப்ட்வேர் பெண் வரை.. காதல் சூழ் உலகு!

"இருபத்தேழாயும் வேண்டா வேண்டான்னு உம்பாட்டுக்கு அர்த்தங்கெட்டதனமா.. உங்கொப்பன் உன்ற வயசுல முந்நூறு குடும்பத்த எதித்திட்டு உங்கம்மால கட்டிக்கிட்டான்.. அப்டி கிப்டி எதாச்சி இருந்துச்சுனா உள்ளதச் சொல்லிப்போடு.." என்று கேட்டுக்கொண்டே வெற்றிலைக் குதப்பலோடு நகர்ந்து விட்ட அப்பாருக்கு எதை சொல்வது? எதை விடுவது? காதல் பிறந்த போதே காத்திருத்தலும், ஏக்கமும், தவிப்பும் இலவச இணைப்பாகத் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும். போருக்கோ, பொருளீட்டவோ பிரிந்து போயிருக்கும் தலைவனுக்காக காத்திருக்கும் தலைவியின் வலியைப் பதிவு செய்ததில் ஆரம்பித்து, இன்று வள்ளுவர் கோட்டத்து ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜைக்கும் கூட சம்மந்தமேயில்லாமல் "ஒய் திஸ் கொல  வெறி டி" என்று காதலின் பிரிவு பாடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எழுத்தாளர் ராஜு முருகனின் "பிரிவைவிட வேறு சிறந்த காதல் பரிசு இருக்கிறதா என்ன?" என்ற வரிகளில் பிரிவின் வலியும், நீங்கா நினைவுகளும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.

உண்மையான காதல்கள் பிரிந்து போவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.. காரணம் என்னவாக இருப்பினும். சாதி மறுத்து மணம் செய்து கொண்டவர்களை பழிவாங்குகிறசாக்கில் ஊரையே தீக்கிரையாக்குற சாதிவெறியர்கள் ஒருபுறமிருக்க, காதலே இல்லாமல் காதலிப்பவர்கள் அச்சமூட்டுகிறார்கள். காதலை மறுக்கிற பெண்ணின் மேல் அமிலம் வீசிச் சிதைக்கிற, முகத்தில் பெட்ரோல் ஊத்திக் கொளுத்துகிற மூர்க்கமானவர்கள் காதலைப் பற்றி என்ன புரிதல் கொண்டிருப்பார்கள்? ஏதோவொரு ஈர்ப்பிற்கு காதலெனும் அர்த்தம் கற்பித்துக்கொண்டவர்கள் எத்தனை பேர்? சாலையைக் கடக்கிற சப்வேயில் காதலுரையாற்றிக்கொண்டிருக்கும் பள்ளிச் சிறார்களைக் கடப்பது எனக்கு வாடிக்கையாகிவிட்டது.. பொள்ளாச்சியில்! இப்படி பக்குவற்ற காதல்களைத்தான் சாதிவெறியர்கள் ஆயுதமாக்கிக் கொள்கிறார்கள். உயிராய் நேசித்து வாழ்க்கையைத் துவங்க நினைப்பவர்களை, அவர்களின் கனவுகளைச் சிதைக்கிறார்கள். 

உண்மையில் நம் சமுதாயத்தின் இன்றைய தேவை.. காதலை உணர்கிற தெளிவும், எதிர்ப்புகளை கடந்து  போகிற புரிதல் மிக்க காதல்களும், பிரியம் வளர்த்துக்கொண்டேயிருக்கும் கலப்புத்  திருமணங்களுமே. காதல்கள் பெருகட்டும். மனிதம் தழைக்கட்டும்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்! 


2 comments:

Anonymous said...

Very good machi...neeyellam nalla varanum da...

Thirumalaisamy Thangavel said...

Nice read da... keep it up.